ஆக்கப்பூர்வமான அறிவியலில் முதலீடு செய்யாமல், தங்கள் வணிகத்தின் தீமைகளை வெளிக்கொணரும் அறிவியலை முடக்கமில்லியன் கணக்கில் முதலீடு செய்வதாக மான்சாண்ட்டோ நிறுவனத்தை அமெரிக்கநீதிமன்றம் கண்டித்துள்ளது. அந்நிறுவனத்திற்கு2.055 பில்லியன் டாலர்கள் (ரூ.14,453 கோடி) அபராதம் விதித்துள்ள கலிபோர்னியா நீதிமன்றம், தங்களுக்கு ஆதரவாக ஏராளமான போலியான ஆய்வறிக்கைகளையும், கட்டுரைகளையும் பணம் கொடுத்து மான்சாண்ட்டோ நிறுவனம் பரப்புவதாகவும் கூறியுள்ளது. மான்சாண்ட்டோ நிறுவனத்தின் ‘ரவுண்ட்-அப்’ என்னும் களைக்கொல்லியைப் பயன்படுத்தியதால் தங்களுக்குப் புற்றுநோய் வந்ததாக ஒரு தம்பதியர் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு 55 மில்லியன் டாலர்கள் (ரூ.386 கோடி) இழப்பீடு உட்பட இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மான்சாண்ட்டோ நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை நேரடியாகப் பார்வையிட்ட நீதிபதிகள், தொடக்கத்திலிருந்தே ரவுண்ட-அப் களைக்கொல்லி பாதுகாப்பானதா என்று அறியக்கூட அந்நிறுவனம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலேயே லஞ்சம்
மான்சாண்ட்டோவை 2018இல் வாங்கிய நிறுவனமான பேயர், ரவுண்ட்-அப் களைக்கொல்லியில் பயன்படுத்தப்படும் ‘கிளைஃபோசேட்’ பாதுகாப்பானது என்று மீண்டும் கூறியுள்ளதுடன், இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. கிளைஃபோசேட் பாதுகாப்பானது என்பதற்கு, அமெரிக்கஅரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின்(இபிஏ) ஆய்வுகளை பேயர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இபிஏவின் சில உயர் அலுவலர்களுக்கும், மான்சாண்ட்டோவுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி அத்தகைய முடிவுகளைப் பெற்றிருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.தனியான கிளைஃபோசேட் வேதிமத்தைவிட, ரவுண்ட்-அப் களைக்கொல்லியின் கலவைமிகவும் ஆபத்தானது என்பதை மான்சாண்ட்டோ நிறுவனம் அறிந்தே இருந்தது என்று நீதிபதிகள் கருத்துத் தொவித்துள்ளனர். ரவுண்ட்-அப் களைக்கொல்லியைப் பயன்படுத்தும்போது முழுமையான பாதுகாப்புக் கருவிகளை அணிந்துகொள்ளுமாறு நிறுவனத்தின் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ள மான்சாண்ட்டோ, அவ்வாறான எந்த எச்சரிக்கையையும் அதைப்பயன்படுத்தும் விவசாயிகளுக்கு விடுக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பல மில்லியன் இழப்பீடு
இதே ரவுண்ட்-அப் களைக்கொல்லியால் புற்றுநோய் ஏற்பட்டதான வழக்கில், ஆகஸ்ட் 2018இல், பாதிக்கப்பட்டவருக்கு 289 மில்லியன்டாலர்கள் இழப்பீடு வழங்குமாறு சான்ஃப்ரான்சிஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில் மற்றொரு வழக்கில் 80 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்கவும் ஒரு தீர்ப்பு உத்தரவிட்டது. இது மட்டுமின்றி,மான்சாண்ட்டோவின் ரவுண்ட்-அப் களைக்கொல்லிக்கு எதிராக மட்டும், புற்றுநோயால்பாதிக்கப்பட்டுள்ள எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சார்பாக நான்காயிரத்துக்குத் அதிகமான வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
நான்காயிரம் வழக்குகள்
இந்த ரவுண்ட்-அப் களைக்கொல்லி சாப்பாட்டு உப்பைவிடப் பாதுகாப்பானது என்று தவறான விளம்பரம் செய்ததாக ஐரோப்பிய ஒன்றியம் 2009இல் பல லட்சம் ரூபாய்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் இந்தக் களைக்கொல்லி விற்பனையையே பிரான்ஸ் நாடு தடை செய்துள்ளது. இந்தக் களைக்கொல்லி தொடர்புடையது என்பதற்காகவே, அமெரிக்க கோதுமை இறக்குமதியை ஜப்பானும், தென்கொரியாவும் கொஞ்ச காலம் தடை செய்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.அமெரிக்க வரலாற்றின் மிக நீண்ட சிவில் வழக்கு விசாரணைகூட மான்சாண்ட்டோவிற்கு எதிரானதுதான் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தோனேஷிய சுற்றுச்சூழல்துறை அலுவலர்களுக்கு 2002இல் 50,000 டாலர் லஞ்சம் கொடுத்ததற்காக, அமெரிக்காவில் மில்லியன்கணக்கில் அபராதமும் செலுத்தியிருக்கிறது மான்சாண்ட்டோ.
ஏமாளிகள் இந்தியர்களே
ஆனால், இந்தக் களைக்கொல்லியை மான்சாண்ட்டோ எந்தப் பிரச்சனையுமின்றி இந்தியாவில் விற்பனை செய்துகொண்டிருக்கிறது. தன் குடிமக்களின் மனித உரிமைக்கு முக்கியத்துவம் தருகிற அமெரிக்காவிலேயே மக்கள் போராடித்தான் இதன் ஆபத்துகளை நிரூபிக்க வேண்டியிருந்திருக்கிறது எனும்போது, இந்திய விவசாயிகளோ, பொதுமக்களோ இதனால் பாதிக்கப்பட்டோம் என்று நிரூபிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்திய விவசாயிகள் எவ்வளவு பாதிப்புற்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதும், அந்தக் களைக்கொல்லியைத் தடைசெய்வதும்தான் அவசரத்தேவைகள். ஆனால், அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் முகமையிலேயே நெருக்கமான அலுவலர்கள் என்ற பெயரில் லஞ்சம் கொடுக்க முடிந்த மான்சாண்ட்டோ இந்தியாவில் இதையெல்லாம் செய்யவே விடாது என்பதுதான் எதார்த்தம். இந்தக் களைக்கொல்லியைப் பயன்படுத்திய விவசாயிகள் மட்டுமின்றி, பயன்படுத்தப்பட்ட வயல்களின் அருகில் வசிக்கும் மக்களையும் பாதித்திருப்பதாகவே இது தொடர்புடைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 2018இல் மட்டும் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,84,821 என்பதிலிருந்து, புற்றுநோய் மிக வேகமாக வளரும் நோயாக இருப்பதில், மான்சாண்ட்டோவிற்கும் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது. விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களின் நலனைக் காக்க,அரசு உடனடியாக இது தொடர்பான ஆய்வுகளைச் செய்து, மான்சாண்ட்டோவின் அனைத்துத் தயாரிப்புகளையும் தடை செய்யவேண்டும்!